உங்களை அன்புடன் வரவேற்கிறோம் இன்னும் சில நாட்களில் இவ் இணையதளம் பல அம்சங்களுடன் உலா வரும்

Wednesday, February 11, 2009

ஈழத்தமிழர்களை பாதுகாக்கக்கோரி புதுச்சேரியில் மாணவர்கள் சாகும் வரை உண்ணாநிலைப்போராட்டம்



புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் பயிலும் மாணவர்கள் ஈழத்தமிழர்களை பாதுகாக்கக்கோரி இன்று காலை(11.02.09) சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்காக ஆதரவாக மாணவர்கள் எழுச்சிகொண்டு போராடி வரும் வேளையில் காங்கிரசு ஆட்சி புரியும் புதுச்சேரி மாநிலத்திலும் மாணவர்கள் அறவழிப்போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். பாரதியார்பல்கலைக்கூட மாணவர்களது உண்ணாநிலைப்போராட்டத்தினை பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநில தலைவர் லோகு.அய்யப்பன் அவர்கள் துவக்கி வைத்து மாணவர்களுக்கு ஈழ நிலவரம் பற்றியும் மாணவர்களது எழுச்சிப்பற்றியும் விளக்கவுரையாற்றினார்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் விபரம் :
1) தீ.இரவிக்குமார்
2) ஆ.பன்னீர்செல்வம்
3) கா.இராசீவ்காந்தி
4) மு.சந்தோஷ்குமார்
5) த.அலெக்சாண்டர்
6) க.சிறீமுருகன்
7) சி.பச்சையப்பன்
8) கி.சிலம்பரசன்
9) ப.எழில்குமார்.
இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து அனைத்து அமைப்பினரும் பொதுமக்களும் மாணவர்களும் வாழ்த்தி உரையாற்றி அவர்களுக்குத் துணையாக இருந்து வருகின்றனர்.

Read more...

வீரத்தமிழ்மகன் முத்துக்குமரனின் சாம்பல் ஊர்வலம் சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி புறப்பட்டது



முத்துக்குமரனின் சாம்பல் சென்னை கொளத்தூரில் இருந்து கொழுவை நல்லூருக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. வீரத்தமிழ்மகன் முத்துக்குமரனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்ட கொழுவை நல்லூரில் அவரது உயிர் தியாகத்தை நினைவு கூறும் வகையில் நினைவுத்தூண் அமைக்கப்படுகிறது.
இந்த சாம்பல் ஊர்வலம் இன்று காலை கொளத்தூரில் தொடங்கியது. இதில் ம.தி.முக. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உள்பட இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள், மீனவர்கள், வணிகர்கள், தமிழுணர்வாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமரனின் சாம்பல் ஊர்வலம் கொளத்தூரில் இருந்து புறப்பட்டு, ஓட்டேரி, புரசைவாக்கம், அமைந்தகரை, வடபழனி, தி.நகர், கிண்டி, தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை, விருத்தாசலம், திட்டக்குடி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, (இரவு தங்குதல்). 12 ஆம் திகதி கீரனூரில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை, திருமயம், சிவகங்கை, மேலூர், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, எட்டயபுரம், தூத்துக்குடி சென்றடைகிறது.
பின்னர் 13 ந் திகதி காலை வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, இராதாபுரம், சாத்தான்குளம், உடன்குடி, பரமன்குறிச்சி, திருச்செந்தூர், ஆறுமுகனேரி, வழியாக ஆத்தூர் சென்றடைகிறது. வீரத்திருமகன் முத்துக்குமரனின் சாம்பல் 13 ந் திகதி கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர் கடலில் கரைக்கப்படுகிறது.
அன்று மாலையில் கொழுவை நல்லூரில் வீரத்திருமகன் முத்துக்குமரனுக்கு நினைவுத்தூன் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது. இதில் வணிகர்கள், மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

Read more...

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அடித்து உதைத்த கல்லூரி நிர்வாகம் ; மாணவர்கள் கொந்தளிப்பு



ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நாமக்கல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது அவர்களை கல்லூரி நிர்வாகம் அடித்து உதைத்து கல்லூரிக்குள் இழுத்துச் சென்றதால் அனைத்து மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விடுமுறையில் இருந்த பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரிகள் 09.2.09 அன்று திறக்கப்பட்டன. இந்நிலையில் நாமக்கல் மல்லசமுத்திரத்தில் உள்ள மகேந்திர பொறியியல் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று (11.2.09) காலை ஒன்பது மணியளவில் "இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்த வலியுறுத்தியும், முன்கூட்டியே பொறியியல் கல்லூரியை திறந்ததை கண்டித்தும்" வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் செய்தனர்.
கைகளில் "மத்திய அரசே இலங்கைக்கு ஆயுத உதவி செய்யாதே, பாராண்ட இனம் இன்று பதுங்கு குழியில்" என்பது போன்ற உணர்வுமயமான தட்டிகள் ஏந்தி இருந்தனர். அம்மாணவர்கள் " எங்களுக்கு முன்கூட்டியே கல்லூரி திறந்து, மாணவர்களிடம் பிரித்தாளும் வேலையை அரசு செய்கிறது. இது எங்களுக்கு தமிழ் உணர்வு இல்லாதது போல் காட்டும் வேலையாகும். எங்களுக்கும் இனமான உணர்வு இருக்கு என்பதை காட்டவே இந்த போராட்டம் என்றவர்கள் "எங்கள் தொப்புள் கொடி உறவுகள் அங்கே கொத்து கொத்தாக சிங்கள அரசால் கொல்லபடுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் அதற்காக அடுத்த கட்டமாக அனைத்துக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து போராட உள்ளோம்" என்றனர்..
மாணவர்கள் போராட்டத்தில் இருக்கும் போதே கல்லூரி நிர்வாகம் மாணவர்களை மிரட்டியும், அதட்டியும் அடித்தும் கல்லூரிக்குள்ளே இழுத்துப் போயினர். இது நாமக்கல் முழுவதும் பரபரப்பாகி உள்ளது. மாணவர்களை அடித்து இழுத்துச் சென்றது காட்டு தீயாக அனனத்துக் கல்லூரிகளுக்கும் பரவி மாணவ சமுதாயத்திடம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.

Read more...

வவுனியா வைத்தியசாலையில் உடையார்கட்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலியான 19 சடலங்கள்

கிளிநொச்சி உடையார்கட்டுப் பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 19 பேரின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவர்களில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் உட்பட 6 பேர் பெண்கள் என்றும், 12 பேர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவ்வாறு அவர்கள் கொண்டு வரப்படவில்லை. அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் தி்ருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

Read more...

இடம்பெயர்ந்து வரும் மக்களால் நிறைந்து வழியும் வவுனியா பாடசாலைகள்

மோதல் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் உள்ள பாடசாலைகள் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். பாடசாலைகள் பலவும் இடம்பெயர்ந்த மக்களால் நிறைந்து வழிகின்றன. எனினும் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களோ, பொதுநிறுவனங்களோ, ஊடகவியலாளர்களோ இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கான இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் உள்ளவர்கள், வன்னியில் இருக்கும் தமது உறவினர்களின் நிலைமை குறித்து அறிய முடியாதவர்களாக இருப்பதுடன், இடம்பெயர்ந்து வந்துள்ளவர்களில் தமது உறவினர்களும் இருக்கின்றார்களா என்பதைச் சென்று பார்க்கவோ அல்லது அறிந்து கொள்ளவோ முடியாத நிலைமையில் உள்ளனர். தமது உறவினர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும், அறிவதற்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்வது குறித்து அதிகாரிகள் அக்கறையற்று இருப்பதாகப் பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். அதேவேளை, வன்னிப்பகுதியில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டோரின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டபோதிலும், இறந்தவர்கள் யார் என்பதைப் பொதுமக்கள் அறியமுடியாதவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர்களின் உடைமையில் உள்ள அடையாள அட்டை மற்றும் ஆவணங்களில் உள்ள விபரங்களைக்கூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிடவில்லை என்றும், இதனால் உறவினர்கள், தெரிந்தவர்கள் இருந்தால்கூட, இறந்தவர்களை அடையாளம் காண முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதென்றும் கவலை தெரிவிக்கப்படுகின்றது

Read more...

பொதுமக்கள் மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல்: விடுதலைப் புலிகள் மறுப்பு



சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது பாரிய இனப்படுகொலையை திட்டமிட்ட ரீதியில் அரங்கேற்றி வருகின்றது அண்மைக்காலங்களில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் என்றும் இல்லாதவாறு கொடிய இனப் படுகொலை ஒன்று தமிழ் மக்கள்மீது சிங்கள அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நாளாந்தம் அப்பாவிப் பொதுமக்கள் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றனர். சிறிலங்காவின் அரச படைகள் வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த இனப்படுகொலையை அரங்கேற்றி வருகின்றது. குறிப்பிட்ட சில பிரதேசங்களை பாதுகாப்பு பிரதேசங்கள் எனப் பிரகடனப்படுத்தி விட்டு அப்பிரதேசத்திற்குள் மக்களையும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தையும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களையும் வரவழைத்து வேண்டும் என்றே பீரங்கித் தாக்குதல்களையும் வான் தாக்குதல்களையும் மேற்கொண்டு மக்களை தொடர்ச்சியாக கொன்றொழித்து வருகின்றது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளும் இதற்கு கண்கண்ட சாட்சிகளாக உள்ளனர். இங்குள்ள மருத்துவமனைகள் எல்லாவற்றின் மீதும் ஆட்லறி எறிகணைகளை வீசி செயலிழக்கச் செய்துள்ளனர். அழிவிற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்த மக்களின் அவலங்களை வெளியுலகத்திற்குப் போகாதவண்ணம் தொலைத்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்களோ, அனைத்துலக தொண்டு நிறுவனங்களோ, மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்களோ எமது பிரதேசத்திற்குள் வருவது சிங்கள அரசினால் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. எமது பிரதேசத்திற்குள் கொண்டு வரப்படும் அத்தியாவசிய மருந்துகள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரிய காயங்களுக்குள்ளாகும் மக்கள் மருந்தின்மையால் நாளாந்தம் இறந்து கொண்டே இருக்கின்றனர். போர் நடக்கும் பிரதேசத்திற்குள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் அரசினால் வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்கள் நாளாந்தம் நாடோடிகள் போன்று இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். காடுகளிலும் மேடுகளிலும் விலங்குகளைவிட மோசமான முறையில் வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமுற்றும் அல்லற்பட்ட வண்ணம் உள்ளனர். 21 ஆம் நூற்றாண்டின் படுமோசமான மனித அவலம் தமிழ் மண்ணில் சிங்கள அரசினால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த மனித அவலத்தை முழு உலக நாடுகளும் கண்டிப்பதோடு நின்றுவிடாமல் அரசிற்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தி அரசியல் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சிளைக்குத் தீர்வுகான முன்வரவேண்டும். ஓரிரு நாட்களுக்கு முன்னர் அப்பாவி பொதுமக்கள் மீது சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நாங்கள் மனித உரிமைகளுக்காக போராடும் ஓர் விடுதலை இயக்கம். எமது மண்ணின் விடுதலைக்காக எமது மக்களும் நாங்களும் அளப்பரிய தியாகங்களை புரிந்தவண்ணம் உள்ளோம். இவ்வாறான மனித சமுதாயம் வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான செயலை நாம் புரியவில்லை என முற்றாக மறுக்கின்றோம். எமது பிரதேசத்திற்கான தொலைத்தொடர்புகளை துண்டித்து விட்டு தனது ஊடகங்களினூடாக சிறிலங்காஅரசு பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது என்பதை அனைத்துலக சமூகத்திற்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

கனேடிய வெளியுற துறை அமைச்சர் கேனனுக்கும் முகர்ஜிக்கும் இடையே தொலைபேசி மூலமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.



இலங்கை பிரச்சினைக்கு அதிகார பகிர்வே இறுதி தீர்வு என இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கனேடிய வெளியுற துறை அமைச்சர் லோரன்ஸ் கேனனுக்கும் பிரணாப் முகர்ஜிக்கும் இடையே நேற்று தொலைபேசி மூலமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்தரையாடலின் போது லோரன்ஸ் கேனன் இலங்கை நிலவரம் குறித்து பிரணாப் முகர்ஜியுடன் கலந்துரையாடி உள்ளார். இந்த கலந்துறையாடலின் போது வடக்கு பகுதியில் உள்ள பொதுமக்கள் யுத்தத்தால் பாதிக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் கவலை வெளியிட்டுள்ளதாக இந்திய செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இந்தநிலையில் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே பிரச்சினைக்கு தீர்வாகும் என பிரணாப் முகர்ஜி கனேடிய வெளியுற துறை அமைச்சரிடம் இதன்போது தெரிவித்துள்ளார்.

Read more...

About This Blog

About This Blog

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP