பாதுகாப்பு பகுதியில் தாக்குதல் நடத்தக்கூடாது இலங்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து கோரிக்கை !
பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தக் கூடாது என்று இலங்கை அரசுக்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் கோரிக்கை விடுத்துள்ளன.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபேன்ட் ஆகியோர் சந்தித்துப் பேசிய பின்னர் இருநாடுகள் சார்பில் கூட்டாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வர அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அப்படிப்பட்ட தீர்வு ஏற்பட ஐநா மற்றும் இலங்கை அரசுடன் இணைந்து தொடர்ந்து செயல்படுவோம். அரசியல் பேச்சுவார்த்தையை துவக்க இதுவே தருணம்.மேலும், இலங்கை ராணுவமும் விடுதலைப் புலிகளும் தற்காலிகமாக போர்நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும். மோதல் நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறி சேவை அமைப்புகளின் உதவியைப் பெற அனுமதிக்க வேண்டும்.பாதுகாப்பான இடங்கள் மற்றும் மருத்துவமனைப் பகுதிகளில் இருதரப்பும் தாக்குதல் நடத்தக்கூடாது.போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்க இருதரப்பினரும் அனுமதிக்க வேண்டும். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு அவர்கள் ஒத்துழைப்பதுடன் அதன் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்த வேண்டும்.சர்வதேச போர் விதிமுறைகளுக்கு மதிப்பளித்து இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் செயல்பட வேண்டும்.இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 மக்கள் கருத்துக்கள்:
Post a Comment