கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்க தலைமையகம் மீது தாக்குதல்
இலங்கையின் கொழும்பு கொள்ளுப்பிட்டி லெயார்ட்ஸ் வீதியில் அமைந்துள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையகத்தின் மீது இன்று பிற்பகல் இனந்தெரியாத கும்பலினால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பிய வண்ணம் அங்கு வந்த கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள். இதன் காரணமாக செஞ்சிலுவை சங்கத்தின் ஊழியர்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகவும், உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதல் என்ன காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இதேவேளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம், சிறிலங்கா படையினர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியதை அம்பலப்படுத்தியிருந்தமை தொடர்பில், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள வைத்தியசாலையை அங்கிருந்து மாற்றுமாறு அரசாங்கத்திடம் தாம் கோரிக்கை விடுப்பதாகவும் விமல் வீரவன்ச இதன்போது தெரிவித்துள்ளார்.
0 மக்கள் கருத்துக்கள்:
Post a Comment