உங்களை அன்புடன் வரவேற்கிறோம் இன்னும் சில நாட்களில் இவ் இணையதளம் பல அம்சங்களுடன் உலா வரும்

Wednesday, February 11, 2009

ஈழத்தமிழர்களை பாதுகாக்கக்கோரி புதுச்சேரியில் மாணவர்கள் சாகும் வரை உண்ணாநிலைப்போராட்டம்



புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் பயிலும் மாணவர்கள் ஈழத்தமிழர்களை பாதுகாக்கக்கோரி இன்று காலை(11.02.09) சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்காக ஆதரவாக மாணவர்கள் எழுச்சிகொண்டு போராடி வரும் வேளையில் காங்கிரசு ஆட்சி புரியும் புதுச்சேரி மாநிலத்திலும் மாணவர்கள் அறவழிப்போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். பாரதியார்பல்கலைக்கூட மாணவர்களது உண்ணாநிலைப்போராட்டத்தினை பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநில தலைவர் லோகு.அய்யப்பன் அவர்கள் துவக்கி வைத்து மாணவர்களுக்கு ஈழ நிலவரம் பற்றியும் மாணவர்களது எழுச்சிப்பற்றியும் விளக்கவுரையாற்றினார்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் விபரம் :
1) தீ.இரவிக்குமார்
2) ஆ.பன்னீர்செல்வம்
3) கா.இராசீவ்காந்தி
4) மு.சந்தோஷ்குமார்
5) த.அலெக்சாண்டர்
6) க.சிறீமுருகன்
7) சி.பச்சையப்பன்
8) கி.சிலம்பரசன்
9) ப.எழில்குமார்.
இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து அனைத்து அமைப்பினரும் பொதுமக்களும் மாணவர்களும் வாழ்த்தி உரையாற்றி அவர்களுக்குத் துணையாக இருந்து வருகின்றனர்.

Read more...

வீரத்தமிழ்மகன் முத்துக்குமரனின் சாம்பல் ஊர்வலம் சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி புறப்பட்டது



முத்துக்குமரனின் சாம்பல் சென்னை கொளத்தூரில் இருந்து கொழுவை நல்லூருக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. வீரத்தமிழ்மகன் முத்துக்குமரனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்ட கொழுவை நல்லூரில் அவரது உயிர் தியாகத்தை நினைவு கூறும் வகையில் நினைவுத்தூண் அமைக்கப்படுகிறது.
இந்த சாம்பல் ஊர்வலம் இன்று காலை கொளத்தூரில் தொடங்கியது. இதில் ம.தி.முக. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உள்பட இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள், மீனவர்கள், வணிகர்கள், தமிழுணர்வாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமரனின் சாம்பல் ஊர்வலம் கொளத்தூரில் இருந்து புறப்பட்டு, ஓட்டேரி, புரசைவாக்கம், அமைந்தகரை, வடபழனி, தி.நகர், கிண்டி, தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை, விருத்தாசலம், திட்டக்குடி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, (இரவு தங்குதல்). 12 ஆம் திகதி கீரனூரில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை, திருமயம், சிவகங்கை, மேலூர், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, எட்டயபுரம், தூத்துக்குடி சென்றடைகிறது.
பின்னர் 13 ந் திகதி காலை வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, இராதாபுரம், சாத்தான்குளம், உடன்குடி, பரமன்குறிச்சி, திருச்செந்தூர், ஆறுமுகனேரி, வழியாக ஆத்தூர் சென்றடைகிறது. வீரத்திருமகன் முத்துக்குமரனின் சாம்பல் 13 ந் திகதி கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர் கடலில் கரைக்கப்படுகிறது.
அன்று மாலையில் கொழுவை நல்லூரில் வீரத்திருமகன் முத்துக்குமரனுக்கு நினைவுத்தூன் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது. இதில் வணிகர்கள், மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

Read more...

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அடித்து உதைத்த கல்லூரி நிர்வாகம் ; மாணவர்கள் கொந்தளிப்பு



ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நாமக்கல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது அவர்களை கல்லூரி நிர்வாகம் அடித்து உதைத்து கல்லூரிக்குள் இழுத்துச் சென்றதால் அனைத்து மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விடுமுறையில் இருந்த பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரிகள் 09.2.09 அன்று திறக்கப்பட்டன. இந்நிலையில் நாமக்கல் மல்லசமுத்திரத்தில் உள்ள மகேந்திர பொறியியல் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று (11.2.09) காலை ஒன்பது மணியளவில் "இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்த வலியுறுத்தியும், முன்கூட்டியே பொறியியல் கல்லூரியை திறந்ததை கண்டித்தும்" வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் செய்தனர்.
கைகளில் "மத்திய அரசே இலங்கைக்கு ஆயுத உதவி செய்யாதே, பாராண்ட இனம் இன்று பதுங்கு குழியில்" என்பது போன்ற உணர்வுமயமான தட்டிகள் ஏந்தி இருந்தனர். அம்மாணவர்கள் " எங்களுக்கு முன்கூட்டியே கல்லூரி திறந்து, மாணவர்களிடம் பிரித்தாளும் வேலையை அரசு செய்கிறது. இது எங்களுக்கு தமிழ் உணர்வு இல்லாதது போல் காட்டும் வேலையாகும். எங்களுக்கும் இனமான உணர்வு இருக்கு என்பதை காட்டவே இந்த போராட்டம் என்றவர்கள் "எங்கள் தொப்புள் கொடி உறவுகள் அங்கே கொத்து கொத்தாக சிங்கள அரசால் கொல்லபடுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் அதற்காக அடுத்த கட்டமாக அனைத்துக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து போராட உள்ளோம்" என்றனர்..
மாணவர்கள் போராட்டத்தில் இருக்கும் போதே கல்லூரி நிர்வாகம் மாணவர்களை மிரட்டியும், அதட்டியும் அடித்தும் கல்லூரிக்குள்ளே இழுத்துப் போயினர். இது நாமக்கல் முழுவதும் பரபரப்பாகி உள்ளது. மாணவர்களை அடித்து இழுத்துச் சென்றது காட்டு தீயாக அனனத்துக் கல்லூரிகளுக்கும் பரவி மாணவ சமுதாயத்திடம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.

Read more...

வவுனியா வைத்தியசாலையில் உடையார்கட்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலியான 19 சடலங்கள்

கிளிநொச்சி உடையார்கட்டுப் பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 19 பேரின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவர்களில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் உட்பட 6 பேர் பெண்கள் என்றும், 12 பேர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவ்வாறு அவர்கள் கொண்டு வரப்படவில்லை. அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் தி்ருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

Read more...

இடம்பெயர்ந்து வரும் மக்களால் நிறைந்து வழியும் வவுனியா பாடசாலைகள்

மோதல் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் உள்ள பாடசாலைகள் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். பாடசாலைகள் பலவும் இடம்பெயர்ந்த மக்களால் நிறைந்து வழிகின்றன. எனினும் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களோ, பொதுநிறுவனங்களோ, ஊடகவியலாளர்களோ இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கான இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் உள்ளவர்கள், வன்னியில் இருக்கும் தமது உறவினர்களின் நிலைமை குறித்து அறிய முடியாதவர்களாக இருப்பதுடன், இடம்பெயர்ந்து வந்துள்ளவர்களில் தமது உறவினர்களும் இருக்கின்றார்களா என்பதைச் சென்று பார்க்கவோ அல்லது அறிந்து கொள்ளவோ முடியாத நிலைமையில் உள்ளனர். தமது உறவினர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும், அறிவதற்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்வது குறித்து அதிகாரிகள் அக்கறையற்று இருப்பதாகப் பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். அதேவேளை, வன்னிப்பகுதியில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டோரின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டபோதிலும், இறந்தவர்கள் யார் என்பதைப் பொதுமக்கள் அறியமுடியாதவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர்களின் உடைமையில் உள்ள அடையாள அட்டை மற்றும் ஆவணங்களில் உள்ள விபரங்களைக்கூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிடவில்லை என்றும், இதனால் உறவினர்கள், தெரிந்தவர்கள் இருந்தால்கூட, இறந்தவர்களை அடையாளம் காண முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதென்றும் கவலை தெரிவிக்கப்படுகின்றது

Read more...

பொதுமக்கள் மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல்: விடுதலைப் புலிகள் மறுப்பு



சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது பாரிய இனப்படுகொலையை திட்டமிட்ட ரீதியில் அரங்கேற்றி வருகின்றது அண்மைக்காலங்களில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் என்றும் இல்லாதவாறு கொடிய இனப் படுகொலை ஒன்று தமிழ் மக்கள்மீது சிங்கள அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நாளாந்தம் அப்பாவிப் பொதுமக்கள் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றனர். சிறிலங்காவின் அரச படைகள் வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த இனப்படுகொலையை அரங்கேற்றி வருகின்றது. குறிப்பிட்ட சில பிரதேசங்களை பாதுகாப்பு பிரதேசங்கள் எனப் பிரகடனப்படுத்தி விட்டு அப்பிரதேசத்திற்குள் மக்களையும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தையும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களையும் வரவழைத்து வேண்டும் என்றே பீரங்கித் தாக்குதல்களையும் வான் தாக்குதல்களையும் மேற்கொண்டு மக்களை தொடர்ச்சியாக கொன்றொழித்து வருகின்றது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளும் இதற்கு கண்கண்ட சாட்சிகளாக உள்ளனர். இங்குள்ள மருத்துவமனைகள் எல்லாவற்றின் மீதும் ஆட்லறி எறிகணைகளை வீசி செயலிழக்கச் செய்துள்ளனர். அழிவிற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்த மக்களின் அவலங்களை வெளியுலகத்திற்குப் போகாதவண்ணம் தொலைத்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்களோ, அனைத்துலக தொண்டு நிறுவனங்களோ, மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்களோ எமது பிரதேசத்திற்குள் வருவது சிங்கள அரசினால் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. எமது பிரதேசத்திற்குள் கொண்டு வரப்படும் அத்தியாவசிய மருந்துகள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரிய காயங்களுக்குள்ளாகும் மக்கள் மருந்தின்மையால் நாளாந்தம் இறந்து கொண்டே இருக்கின்றனர். போர் நடக்கும் பிரதேசத்திற்குள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் அரசினால் வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்கள் நாளாந்தம் நாடோடிகள் போன்று இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். காடுகளிலும் மேடுகளிலும் விலங்குகளைவிட மோசமான முறையில் வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமுற்றும் அல்லற்பட்ட வண்ணம் உள்ளனர். 21 ஆம் நூற்றாண்டின் படுமோசமான மனித அவலம் தமிழ் மண்ணில் சிங்கள அரசினால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த மனித அவலத்தை முழு உலக நாடுகளும் கண்டிப்பதோடு நின்றுவிடாமல் அரசிற்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தி அரசியல் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சிளைக்குத் தீர்வுகான முன்வரவேண்டும். ஓரிரு நாட்களுக்கு முன்னர் அப்பாவி பொதுமக்கள் மீது சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நாங்கள் மனித உரிமைகளுக்காக போராடும் ஓர் விடுதலை இயக்கம். எமது மண்ணின் விடுதலைக்காக எமது மக்களும் நாங்களும் அளப்பரிய தியாகங்களை புரிந்தவண்ணம் உள்ளோம். இவ்வாறான மனித சமுதாயம் வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான செயலை நாம் புரியவில்லை என முற்றாக மறுக்கின்றோம். எமது பிரதேசத்திற்கான தொலைத்தொடர்புகளை துண்டித்து விட்டு தனது ஊடகங்களினூடாக சிறிலங்காஅரசு பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது என்பதை அனைத்துலக சமூகத்திற்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

கனேடிய வெளியுற துறை அமைச்சர் கேனனுக்கும் முகர்ஜிக்கும் இடையே தொலைபேசி மூலமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.



இலங்கை பிரச்சினைக்கு அதிகார பகிர்வே இறுதி தீர்வு என இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கனேடிய வெளியுற துறை அமைச்சர் லோரன்ஸ் கேனனுக்கும் பிரணாப் முகர்ஜிக்கும் இடையே நேற்று தொலைபேசி மூலமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்தரையாடலின் போது லோரன்ஸ் கேனன் இலங்கை நிலவரம் குறித்து பிரணாப் முகர்ஜியுடன் கலந்துரையாடி உள்ளார். இந்த கலந்துறையாடலின் போது வடக்கு பகுதியில் உள்ள பொதுமக்கள் யுத்தத்தால் பாதிக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் கவலை வெளியிட்டுள்ளதாக இந்திய செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இந்தநிலையில் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே பிரச்சினைக்கு தீர்வாகும் என பிரணாப் முகர்ஜி கனேடிய வெளியுற துறை அமைச்சரிடம் இதன்போது தெரிவித்துள்ளார்.

Read more...

இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க இரண்டு தடவை ஆட்சியிழந்துள்ளது - கருணாநிதி


இலங்கை தமிழர்களுக்காக திராவிட முன்னேற்ற கழகம் தனது ஆட்சியை இரண்டு முறை இழந்திருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்த போது இலங்கை தமிழர்களுக்காக எதனையும் செய்துவிட வில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 1976 ஆம் மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக தனது ஆட்சியை திராவிட முன்னேற்ற கழகம் இழந்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை இலங்கை தமிழர் பிரச்னைகளுக்காக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் தாக்கப்படுவதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

Saturday, February 7, 2009

அனுராதபுரத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது தாக்குதல்



அனுராதபுரத்தில் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான பணிப்பாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

வவுனியாவில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் உட்பட 4 பேர் வவுனியா பகுதியில் சுட்டுக்கொலை



வவுனியாவில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
செட்டிகுளம் கிறிஸ்தவகுளம் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்விருவரும் மோட்டார் சைக்கிளொன்றில் சென்று கொண்டிருந்த போது இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இருவரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
இவர்களது சடலங்கள் பின்னர் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன. சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்ற படையினரும் பொலிஸாரும் அங்கு சுற்றிவளைப்பு மற்றும் தேடுதலை நடத்தியுள்ளனர்.
இதேநேரம், வவுனியா செக்கடிப்பிலவு பகுதியில் வியாழக்கிழமை மாலை இளைஞன் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இவரது சடலம் அந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. கொல்லப்பட்டவர் நிசாந்தன் (18 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் பின்னர் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை வவுனியா பட்டகாடு பகுதியில் இளைஞனொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வீதியோரத்தில் குப்பை மேட்டுக்கு அருகில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட இவரது சடலம் பின்னர் வவுனியா ஆஸ்பத்திரியில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.

Read more...

ஈழத்தமிழர்கள் படும் அவலங்களால் சீர்காழி காங்கிரஸ் வட்டாரத் தலைவர் தீக்குளிப்பு: அவர்களுக்கு என் உயிரை காணிக்கையாக்குகிறேன்; மருத்துவமனையில் நீதவானிடம்




நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீர்காழி வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவிச்சந்திரன் (45 வயது) இன்று சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டபடி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
இதுபற்றி தெரியவருவதாவது:-
சீர்காழி மணல்மேடு பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் வேலை பார்க்கும் ரவிச்சந்திரன் அதிகாலை 2.30 மணிக்கு திடீரென தன் வீட்டிற்கு வெளியே வந்து, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் இட்டபடியே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
ரவிச்சந்திரனின் உரத்த குரலை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனாலும் அதற்குள் ரவிச்சந்திரனின் உடல் 65 சதவீதம் தீக்காயங்களுடன் கருகி விட்டது. தீக்குளித்த ரவிச்சந்திரனின் உயிரைக் காப்பாற்ற மயிலாடுதுறை அரசு மருத்துவமனிக்கு கொண்டு சென்றனர். அப்போது, ஈழத்தில் தினந்தோறும் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்களுக்காகவும் அவர்களுக்கு எதுவும் உதவாத தன் கட்சியை கண்டித்தும் இந்த தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக சொல்லியிருக்கிறார் ரவிச்சந்திரன். ரவிச்சந்திரனின் தாயார் சாரதாவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். அவர் மகளிர் காங்கிரஸ் பிரிவு உறுப்பினர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஒருவர் தீக்குளித்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ரவிச்சந்திரன் வாக்குமூலம்
தீக்குளித்த ரவிச்சந்திரன் உயிரைக் காப்பாற்ற மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரவிச்சந்திரன் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் உயிர் பிழைப்பார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கவில்லை. உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறை மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அந்த வாக்குமூலத்தில் நேற்று இரவு டி.வி.பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஈழத்தமிழர்களின் அவலங்களை பார்த்து நெஞ்சு பதைத்தேன். இத்தனை அவலத்திற்கு உள்ளாகியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவ என் கட்சியினர் முன்வரவில்லையே என எனக்கு ஆதங்கமாக இருந்தது.
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். அங்கே அப்பாவித்தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்தியா நினைத்தால் இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆனால் அதற்கான முயற்சியில் இறங்காதது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. ஈழத்தமிழர்களுக்காக என் உயிரை காணிக்கையாக்குகிறேன்’’ என்று தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
ரவிச்சந்திரன் வீட்டில் தீக்குளிப்பதற்கு முன்பு தினசரி செய்தித்தாள் ஒன்றில் ஈழத்தமிழர்கள் துயரம் தன்னை மிகவும் பாதித்ததாக எழுதி வைத்துள்ளார். கூடவே "தமிழீழம் வாழ்க" என்றும் "ராஜபக்ச ஒழிக" என்றும் முழக்கங்களையும் எழுதி வைத்துள்ளார்.

Read more...

கோத்தபாய, பொன்சேகாவுக்கு எதிராக தமிழ் இன அழிப்பு குற்றச்சாட்டு; அமெரிக்க நீதிமன்றில் புறூஸ் பெயின் வழக்கு தாக்கல்



இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அந்நாட்டின் இராணுவத் தளபதி லெப்.கேணல் சரத்பொன்சேகா ஆகிய இருவர் மீதும், அமெரிக்க நீதிமன்றத்தில் இன அழிப்புக் குற்றம் சுமத்தப்பட்டு, அமெரிக்காவின் முன்னாள் பிரதி உதவி சட்டமா அதிபர் புறூஸ் பெயின் அவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் சட்டத்துக்குப் புறம்பான 3,750 கொலைகளைச் செய்தும், 10,000 பேரை காய முறச்செய்தும், 13 லட்சம் மக்களை இடம்பெயர வைத்து அவலமுறச்செய்தும்,
குற்றமிழைத்துள்ளார்கள் என்பவை உட்பட பன்னிரெண்டு குற்றச்சாட்டுக்கள் அமெரிக்க சட்டமா அதிபரிடமும் நீதி அமைச்சிடமும் வியாழனன்று தாக்கல் செய்யப்பட்டன.
அமெரிக்காவின் இன அழிப்புக்குப் பொறுப்புக் கூறும் சட்டத்தின் (G.A.A) கீழ் இருவர் மீதான குற்றச்சாட்டுக்களையும் அமெரிக்காவின் முன்னாள் பிரதி உதவி சட்டமா அதிபர் புறூஸ் பெயின் தாக்கல் செய்தார்.
தமக்கு கீழ் பணியாற்றும் பாதுகாப்புப் படையினர் செய்த இன அழிப்புக் கொலைகளை, பாதுகாப்புச் செயலாளரும், இராணுவத் தளபதியுமே உத்தரவிட்டுச் செய்வித்தார்கள் என்பதால், அவர்களே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று வழக்குத்தொடருநரான புறூஸ் பெயின் தமது மனுவில் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவரங்களை புறூஸ் பெயின் அசோசியேட்ஸ் நிறுவனம் நேற்று வாஷிங்ரனில் வெளியிட்டது.
இலங்கையின் பன்னிரண்டு மாவட்டங்களில் 2005 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் (சம்பந்தப்பட்ட இருவரும் தமது அரசாங்கப் பதவிகளை பொறுப்பேற்ற நாள் தொடக்கம்) வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நாள் வரை இடம்பெற்ற சட்டத்துக்கு முரணான 3,750 கொலைகளுக்கும் 10,000 பேர் உடல் ரீதியான உபாதைகளுக்கு ஆளாவதற்கும் 13 இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்து அவலப்படுவதற்கும் இவர்கள் இருவருமே காரணமானவர்கள், பொறுப்பாளிகள் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த எண்ணிக்கைகள், முன்னாள் யுகோஸ்லாவிய ஜனாதிபதி ஏற்படுத்திய இடப்பெயர்வுகளினால் கொசோவாவில் உண்டான இன அழிப்பு எண்ணிக்கையை விட மிகவும் அதிகமானதாகும் எனவும் மனுவில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தினால் 2007 ஆம் ஆண்டு அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட இன அழிப்பு பொறுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்படும் முதலாவது வழக்கு இதுவாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜை என்பதாலும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா "கிறீன் காட்" பெற்றவர் என்பதாலும் அவர்கள் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடர முடியும் என்றும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இன அழிப்புக்கு எதிரான தமிழர் இயக்கம், தமிழர் சட்ட பாதுகாப்பு நிதியம் ஆகியவற்றின் சார்பிலேயே புறூஸ் பெயின் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

Read more...

Friday, February 6, 2009

டென்மார்க் நாடாளுமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு பேரணி: 4 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்பு

ஈழத் தமிழர்களின் சுதந்திரம் ஆங்கிலேயரால் சிங்கள அரசிடம் தாரைவார்த்து கொடுக்கப்பட்ட கறுப்பு நாளான பெப்ரவரி 4 இல் டென்மார்க்கின் தலைநகரமான கொப்பன்கேகனில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.

இந்த வகையில் கடந்த புதன்கிழமை (04.02.09) முற்பகல் 11:30 நிமிடமளவில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொப்பன்கேகன் நகர சபைப் பகுதியில் ஒன்றுகூடி முழக்கங்களை எழுப்பியபடி பெரும் பேரணியாக நாடாளுமன்றத்தை சென்றடைந்தனர்.

இதில் முன்னாள் சமூக ஜனநாயக கட்சியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மோன்ஸ் லுக்கரொப்ற் அவர்களும், மற்றும் சமூக மக்கள் கட்சியின் வெளிவிவகார அரசியல் நிறைவேற்று அதிகாரி சிறீன் கேத ஆகியோரும் கலந்து கொண்டதுடன் உரையாற்றியும் உள்ளனர்.





தேசியம், சுயநிர்ணயம், சுயாட்சி போன்ற பல கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் எமது பிரச்சினை தொடர்பாக விவாதிப்பதாகவும் உறுதிமொழி வழங்கினர்.

பேரணி நாடாளுமன்றத்தை சென்றடைவதற்கு முன்னதாக டெனிஸ் காவல்துறையினரால் பலத்த பாதுகாப்புக்கள் போடப்பட்ட நிலையிலும் எமது இளைஞர்கள் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவியையும் சிறிலங்கா தேசியக் கொடியையும் வீதிகளிலும் இந்திய தூதரகம் முன்பாகவும் எரித்து தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.















Read more...

சிறிலங்கா படையினரின் உறவினர்கள் கொழும்பில் முற்றுகை: கடந்த சில நாட்களில் மட்டும் வன்னியில் 800 படையினர் பலி; 700 பேர் காயம்



தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வன்னியில் நடைபெற்று வரும் மோதல்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த சிறிலங்கா படையினரின் உறவினர்கள் பலர் கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு சென்று தமது பிள்ளைகள், கணவன்மார் குறித்து உடனடியாக தகவல் தருமாறு அழுது புலம்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வன்னியில் இதுவரை நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் அதிகமான படையினரின் உடலங்கள் எதுவும் உறவினர்களிடம் கையளிக்கப்படவில்லை எனவும் இதனால் சந்தேகம் கொண்ட மனைவிமாரும் பெற்றோரும் கொழும்பு இராணுவ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு விபரங்களை தருமாறு அழுத்தம் கொடுக்கின்றனர் என்றும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்து அனுராதபுரம், பொலநறுவ மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனை, கொழும்பு இராணுவ மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வரும் படையினரை பார்வையிட அனுமதிக்குமாறும் பெற்றோரும் மனைவிமாரும் படைத் தளபதிகளிடம் மன்றாட்டமாக கேட்பதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, முல்லைத்தீவு, விசுவமடு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதலில் 800-க்கும் அதிமான படையினர் உயிரிழந்தும் 700-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர் என்பதை கொழும்பில் உள்ள உயர் இராணுவ அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வன்னியில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட சாதாரண படையினரின் மாதாந்த சம்பளம் நிறுத்தப்பட்டதன் காரணமாகவே உறவினர்கள் கொழும்பு தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டதாகவும் தெரிவித்த அந்த அதிகாரி, கொல்லப்பட்ட உயர் பதவியில் உள்ள படையினரின் சம்பளங்கள் மாத்திரமே அரசாங்கத்தால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Read more...

அரசியல் தீர்வு மூலமே இலங்கை பிரச்சினைக்கு தீர்வு எட்டமுடியும் - ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம்



இலங்கையில் நீண்டகாலமாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் ஊடாகவே நிரந்தர சமாதானத்தை எட்ட முடியும் என ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களினால் பொதுமக்களே பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்து மோதலில் ஈடுபட்டு வரும் தரப்பினர் அதிக கவனம் செலுத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சர்வதேச போர் சட்ட விதிகளுக்கு அமைவாக யுத்தத்தை முன்னெடுக்குமாறு அரசாங்கப் படையினரிடமும், விடுதலைப் புலிகளிடமும் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யுத்த பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான பிரதேசங்களுக்கு சிவிலியன் பாதுகாப்பாகச் செல்ல இரு தரப்பினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்களது மனிதாபிமான தேவைகைள மதிப்பீடு செய்ய சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. 250,000பொதுமக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை தடையின்றி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read more...

கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்க தலைமையகம் மீது தாக்குதல்



இலங்கையின் கொழும்பு கொள்ளுப்பிட்டி லெயார்ட்ஸ் வீதியில் அமைந்துள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையகத்தின் மீது இன்று பிற்பகல் இனந்தெரியாத கும்பலினால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பிய வண்ணம் அங்கு வந்த கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள். இதன் காரணமாக செஞ்சிலுவை சங்கத்தின் ஊழியர்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகவும், உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதல் என்ன காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இதேவேளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம், சிறிலங்கா படையினர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியதை அம்பலப்படுத்தியிருந்தமை தொடர்பில், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள வைத்தியசாலையை அங்கிருந்து மாற்றுமாறு அரசாங்கத்திடம் தாம் கோரிக்கை விடுப்பதாகவும் விமல் வீரவன்ச இதன்போது தெரிவித்துள்ளார்.

Read more...

பேர்லினில் 15 ஆயிரம் தமிழர்கள் கலந்துகொண்ட வரலாறு காணாத பேரிழுச்சி

நேற்றுப் புதன்கிழமை மதியம் 12.30 மணியளவில் யேர்மனி நாட்டுக்கான நோர்வே தூதரகத்தின் முன்னால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நோர்வே தூதர சாலையிலிருந்து கண்டனப் பேரணிக்கு தயாராகும் மக்கள்
நேற்றுப் புதன்கிழமை மதியம் 12.30 மணியளவில் யேர்மனி நாட்டுக்கான நோர்வே தூதரகத்தின் முன்னால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழினப் படுகொலையைக் கண்டித்தும், போரை நிறுத்தக் கோரி நோர்வே தூதரகத்தில் மனுக் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்களின் படிகள் ஸ்கன்ரிநேவிய நாடுகளுக்கும் நோர்வே ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
நோர்வே தூதரகத்தில் ஆரப்பிக்கப்பட்ட கண்டனப் பேரணி தூதரகங்கள் அமைந்துள்ள பிரதான சாலை ஊடாக கோசங்களை எழுப்பியவாறும் சொற்கட்டுகள் மற்றும் பதாதைகளைத் தாங்கிவாறும் நகர்ந்து சென்றது


சிறீலங்கா அரசே இன அழிப்பை நிறுத்துசிறீலங்கா அரசே போரை உடன் நிறுத்துஊடகங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துஎங்கள் நாடு தமிழீழம்இந்திய அரசே உதவுவதை நிறுத்துஇந்திய அரசசே போரை நிறுத்த உதவு

முன்னகர்ந்து சென்ற பேரணி, இந்தியத் தூதரகம் முன்னால் நிறுத்தப்பட்டு இந்திய அரசு போரை நிறுத்தக் கோரி அழுத்தம் கொடுக்கப் கோரியும், சிறீலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தக் கோரியும், போரை இந்தியாவே தலைமையேற்று நடத்துகின்றது என்பதைக் கண்டித்தும் 30 நிமிடத்திற்கு மேலாக கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தொடர்ந்து மனு ஒன்று இந்திய தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மனுக் கையளிக்கப்பட்டதும் பேரணி தூதரகச் சாலை ஊடாக மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் பேர்லின் மத்திய நகரான சொனி சென்றர் ( கனககனகன) பிரதான சாலை ஊடாக சென்ற பேரணி பிரண்டன்பேர்க் கோபுரம் முன்னால் நிறுத்தப்பட்டது




பின் அங்கிருந்து யேர்மனி நாட்டின் அரச அதிபர் செயலகத்தின் முன்னாலும் யேர்மன் பாராளுமன்றத்திற்கு அருகாமையிலும் கண்டனப் பேரணி சென்றடைந்தது ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சமநேரத்தில் யேர்மனி அரச அதிபருக்கான மனு கையளிக்கப்பட்டதும் கண்டனப் பேரணி நிறைவடைந்தது.


யேர்மனியில் தமிழர்கள் வாழும் ஒவ்வொரு நகரத்திலிருந்தும் 600 கிலோ மீற்றர் தொடக்கம் 950 கிலோ மீற்றர் வரைக்கும் பேருந்துகளில் பயணித்து 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் உணர்வுடன் கலந்துகொண்டு பேரணிக்கு வலுவூட்டியுள்ளனர்


இப்பேரணி தொடர்பான யேர்மனி மற்றும் பிறநாட்டு ஊடகங்களான தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், சஞ்சிகைள், இணையங்கள் என்பவற்றில் வெளிவந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது



Read more...

ஜனவரி 26 முதல் பெப்ரவரி 2ம் திகதி வரை வன்னியில் 733 அப்பாவிமக்கள் பலி; 2615 பேர் காயம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி. தகவல்



வன்னியில் ஜனவரி 26ம் திகதி முதல் பெப்ரவரி 2ம்திகதி வரையான காலப்பகுதிக்குள் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டு வீச்சுக்கள் மற்றும் பீரங்கி, எறிகணைத் தாக்குதல்களினாலும் 733 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 2615 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்கான ஆதாரங்கள் புள்ளிவிபரங்கள் எம்மிடம் உள்ளன. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் அனைவரையும் அரசாங்கம் புலிகள் என்று கூறிவருவது கடைந்தெடுத்த பொய்யாகும்.
எதிர்காலத்தில் சகோதரத்துவத்துடன் வாழ்வோம் என்று கூறிக்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழனின் மனதையும் சிதைத்துக்கொண்டிருக்கின்றது இந்த அரசாங்கம்.
கடந்த 26ம் திகதி காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையில் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 302 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 985 பேர் படுகாயமடைந்தனர்.
3ம் திகதி மாத்திரம் 5000 எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. இத்தாக்குதலில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை பாரிய சேதத்திற்று உள்ளானதுடன் அங்கு 53 பேர் கொல்லப்பட்டு 82 பேர் படுகாயமடைந்தனர். இதில் தாதி ஒருவரும் 11 நோயாளிகளும் அடங்குவர்.
இச்சம்பவம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய அங்கு கொல்லப்பட்டவர்கள் புலிகள் என்றும் அது இராணுவ இலக்கு என்றும் கூறுகின்றார். அவர் கூறுவது போல அந்த வைத்தியசாலையில் புலிகள்தான் சிகிச்சைபெற்று வந்திருந்தாலும் கூட வைத்தியசாலைகள் யுத்த தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும் என்று சர்வதேச பாதுகாப்புச் சட்டம் ஒன்று இருக்கின்றது என்ற பொறுப்பு இருக்கவேண்டும்.
பாதுகாப்புச் செயலாளரின் கூற்றுப்படி பார்ப்போமென்றால் வவுனியா, அநுராதபுரம் ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மீது புலிகள் தமது இலக்குகளாகக்கொண்டு தாக்குதலை மேற்கொள்வார்களேயானால் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து சிநிதித்து பார்க்கவேண்டும்.
இது இவ்வாறிருக்க வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் பாலித ஹோகன்ன அவர்கள் அவ்வாறு வைத்தியசாலையில் தாக்குதல் எவையும் நடத்தப்படவே இல்லை என்கிறார். இது எப்படிப்பட்ட கபட நோக்கு என்பது தெளிவாகின்றது.
இதேவேளை தற்போது சர்வகட்சிக்குழுவின் தீர்வு யோசனைகள் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகின்றது. அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் என்பது தமிழ்மக்களை பொறுத்தமட்டில் காலம் கடந்த திட்டமாகும்.
எம்மைப் பொறுத்தவரையில் தமிழ், முஸ்லீம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற தீர்வாகவே எதுவும் அமையவேண்டும். அவ்வாறு இல்லாத தீர்வு பொருத்தமானதாக அமையப்போவதில்லை.
எனவே இன்றைய கடைசித் தருணத்திலாவது அரசாங்கம் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும். இல்லையேல் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது இயலாத காரியமேயாகும்.என்றார் சுரேஸ் எம்.பி.

Read more...

உடனடியாக சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும்: பிரான்ஸ் கோரிக்கை



இலங்கையில் உடனடியாக சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பல தசாப்தங்களாக நீடித்து வரும் போராட்டத்திற்கு அரசியல் தீர்வுத் திட்டத்தின் மூலமே நிரந்தரத் தீர்வினை எட்ட முடியும் என பிரான்ஸ் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளிடம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் இணைந்து நாட்டின் அனைத்து குடிமக்களது உரிமைகளையும் பேணும் வகையில் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக பெருந்தொகையாக சிவிலியன்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரான்ஸ் அரசாங்கம் இது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பான் கீ மூன் ஜனாதிபதியிடம் தொலைபேசியில் கோரிக்கை



வட பகுதியில் இடம்பெற்று வரும் யுத்த நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்தவிடம் தொலைபேசி மூலம் கோரியுள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஐ.நா செயலாளர் நாயகம் ஜனாதிபதி மாளிகைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் சுமார் கால் மணித்தியாலங்கள் நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது

Read more...

தமிழருக்காக வெள்ளை மாளிகைக்கு போகும் வழி இதோ!


இலங்கைத்தமிழர் விடயத்தில் தற்போதய ஆளும் காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யப்போவதில்லை. தமது சொந்த பகைக்காக நடத்தும் யாகத்தில் ஒரு இனத்தையே போட்டு எரிக்கின்றனர்.
எவ்வளவு கண்ணீர் விட்டாலும், தீக்குளித்தாலும், உண்ணாவிரதம் இருந்தாலும், காந்திய வழியில் அறப்போராட்டம் செய்தாலும் - காந்தியின் பெயரைச்சொல்லி ஆட்சி செய்பவர்கள் காது கொடுத்து கேட்கப்போவது இல்லை. எனவே இந்தியா உட்பட (காங்கிரஸ் அரசாங்கம்) அனைவரின் தலையிலும் குட்டக்கூடிய ஒரு பராக்கிரமசாலிதான் இலங்கைத்தமிழருக்கு இப்போது வேண்டும். அந்த பராக்கிரமசாலி அமெரிக்கா! உங்கள் போராட்டங்கள் மெல்ல உத்வேகம் பெறும் இவ்வேளை நேரத்தை கடத்தாமல் பராக்கிரமசாலியை பலவழிகளில் அணுகுங்கள். இதோ ஒரு வழி… அமெரிக்கா அரசாங்கத்தின் வெள்ளைமாளிகை வலைத்தளத்தினூடாக கோரிக்கை வைக்கும் முறை. இந்த வழியினூடாக 500 வசனங்களுக்கு மேற்படாமல் உங்கள் கோரிக்கையை வையுங்கள். மிகச்சின்ன ஒரு வசனமாகக்கூட இருக்கல்லாம். உதாரணத்திற்கு:

" Please stop the Genocide of TAMILS in Sri Lanka "
" Please help to Srilankan Tamils"
"Please help to Srilankan Tamils Freedom"

இவ்வாறு இன்னும் பல நீங்களாகவே எழுதி அனுப்புங்கள். (யாராவது நல்ல நல்ல வசனங்களை எழுத இங்கு உதவுங்கள்)நாம் கோரிக்கையை வைக்கும் உலகில் அதி உயர் அதிகாரம் உள்ள இடம் இது என்பதை மறந்துவிட்டதீர்கள். சரி வாருங்கள் இங்கு கிளிக் பண்ணி - வெள்ளைமாளிகைக்கு http://www.whitehouse.gov/contact/

Read more...

Thursday, February 5, 2009

பாதுகாப்பு பகுதியில் தாக்குதல் நடத்தக்கூடாது இலங்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து கோரிக்கை !


பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தக் கூடாது என்று இலங்கை அரசுக்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் கோரிக்கை விடுத்துள்ளன.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபேன்ட் ஆகியோர் சந்தித்துப் பேசிய பின்னர் இருநாடுகள் சார்பில் கூட்டாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வர அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அப்படிப்பட்ட தீர்வு ஏற்பட ஐநா மற்றும் இலங்கை அரசுடன் இணைந்து தொடர்ந்து செயல்படுவோம். அரசியல் பேச்சுவார்த்தையை துவக்க இதுவே தருணம்.மேலும், இலங்கை ராணுவமும் விடுதலைப் புலிகளும் தற்காலிகமாக போர்நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும். மோதல் நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறி சேவை அமைப்புகளின் உதவியைப் பெற அனுமதிக்க வேண்டும்.பாதுகாப்பான இடங்கள் மற்றும் மருத்துவமனைப் பகுதிகளில் இருதரப்பும் தாக்குதல் நடத்தக்கூடாது.போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்க இருதரப்பினரும் அனுமதிக்க வேண்டும். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு அவர்கள் ஒத்துழைப்பதுடன் அதன் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்த வேண்டும்.சர்வதேச போர் விதிமுறைகளுக்கு மதிப்பளித்து இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் செயல்பட வேண்டும்.இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Tuesday, February 3, 2009

புதுவகை எரிகுண்டுகள்; இன்று (செவ்வாய்) மட்டும் வன்னியில் 58 தமிழர்கள் படுகொலை 84 பேர் காயம்

"மக்கள் பாதுகாப்பு வலயம்" என தானே அறிவித்து இடம்பெயர்ந்த மக்களை சுதந்திரபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அடைக்கலம் புக வைத்த பின்னர் - சிறிலங்கா படைகள் தொடர்ச்சியாக நடத்தும் கடுமையான பீரங்கி எரிகுண்டுத் தாக்குதல்களில் இன்று செவ்வாய் மட்டும் 58 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 84 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், இப்போது, சிறிலங்கா படையினர் பாவிக்கும் பீரங்கிக் குண்டுகள் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் ஒரு வகை எரிகுண்டுகளாக இருப்பதாக கூறப்படுகிறது 50 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்களும், மேலும் 10 ஆயிரம் வரையான ஏற்கனவே குடியிருந்த மக்களும் வாழ்ந்து வந்த சுதந்திரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை வரை சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்றைய இந்த தாக்குதலில் 58 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 84 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த பகுதியில் தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மீட்புப் பணிகள் சரிவர செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், மீட்புப் பணிகள் முழுமையாக முடிவடையும் போது கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களினதும் எண்ணிக்கை இதனைவிட அதிகமாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை நடைபெற்ற மீட்புப் பணிகளில் 55 பேரினது உடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதேசமயம், புதுக்குடியிருப்பு நுண்கலைக் கல்லூரி மீது இன்று காலை 8:30 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதலில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். எரிக்கும் குண்டுகள் இதேவேளை, சிறிலங்கா படையினர் தற்போது ஏவும் பீரங்கி எறிகணைகள் யாவுமே வீழ்ந்து வெடிக்கும் இடத்தில் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் தன்மையுடையதாக கூறப்படுகிறது மனித உடல்களோ, மரங்களோ, கட்டடங்களோ, வாகனங்களோ எதுவாயிருந்தாலும் பற்றி எரிகின்றது. இதனால், அண்மைக்காலங்களில் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகின்றவர்கள் எல்லோருமே உடல் கருகி உயிரிழப்பதுடன், காயமடைகின்றவர்களும் மிகக் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகின்றனர் சிறிலங்கா படைகள் ஏவும் இந்த எறிகணைகள், எல்லாவற்றையும் எரித்துக் கருக்கும் தன்மை உடையவையாக இருப்பினும் இந்த எறிகணைகள் சரியாக எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை இன்னமும் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read more...

வன்னியில் சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்

வன்னியில் கேப்பாபுலவு என்ற இடத்தில் சிறிலங்கா படையினரின் முன்னரங்க நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பிய ஊர்தியுடன் இரண்டு கரும்புலிகள் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கும் முள்ளிவளைக்கும் இடையில் உள்ள கேப்பாபுலவு என்ற இடத்தில் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினரின் நிலைகள் மீது நேற்று செவ்வாய்க்கிழமை வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி மூலம் இரண்டு கரும்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலின் போது லெப். கேணல் குயில்வண்ணன் என்று அழைக்கப்படும் சிவலிங்கம் சிவராஜா, மேஜர் புலிவேந்தன் என்று அழைக்கப்படும் வவுனியா, நெடுங்கேணியைச் சேர்ந்த தியாகராஜா தமிழ்ச்செல்வன் ஆகிய இரு கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட இழப்பு விவரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

Read more...

அமெரிக்க ராணுவம் ஒரு ஆண்டுக்குள் நாடு திரும்புமஒபாமா அறிவிப்பு

ஈராக்கில் தங்கி இருந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களில் பெரும்பகுதியினர் ஒரு ஆண்டு காலத்துக்குள் நாடு திரும்புவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார்.

தேர்தல் கால வாக்குறுதி

ஈராக் நாட்டின் மீது கடந்த 2003-ம் ஆண்டு தாக்குதலை அமெரிக்கா தொடங்கியது. அப்போது முதல் அந்த நாட்டில் அமெரிக்க ராணுவம் குவிக்கப்பட்டது. இப்போது அந்த நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கி இருந்து பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள். அங்கு இருந்து ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்கர்கள் கோரி வந்தனர். இதற்கு முந்தைய ஜனாதிபதி புஷ் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போதே ஒபாமா, மாதம் ஒன்று அல்லது இரண்டு பிரிகேட் (படைப்பிரிவு) என்ற அடிப்படையில் 16 மாதத்துக்குள் ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்பப் பெறுவேன் என்று உறுதி மொழி கொடுத்தார்.

ஒரு ஆண்டுக்குள்

இந்த நிலையில் என்.பி.சி. டி.வி சேனலுக்கு அளித்த பேட்டியில், ஒபாமா கூறுகையில், ஒரு ஆண்டு காலத்துக்குள் பெரும் அளவில் அமெரிக்க ராணுவ வீரர்கள் நாடு திரும்புவார்கள். நான் அமெரிக்க ராணுவத் தளபதிகளுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினேன். இதில் ஈராக்கில் களப்பணியில் ஈடுபட்டு உள்ள தளபதிகளும் கலந்து கொண்டனர். ஈராக்கில் சமீபத்தில் மாநில சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்து உள்ளது. அப்போது குறிப்பிடத்தக்க அளவில் வன்முறை எதுவும் நிகழவில்லை. எனவே ஈராக்கியர்கள் மீது மேலும் அதிகமான பொறுப்புகளை சுமத்தக்கூடிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

இவ்வாறு ஒபாமா கூறினார்.

ஆப்கானிஸ்தானில் அதிகரிக்க

ஆப்கானிஸ்தானில் இப்போது 36 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 18 மாதங்களுக்குள் 60 ஆயிரத்தை விட அதிகப்படுத்தப்படுத்தலாமா என்று ஒபாமா நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

ஈராக்போரில் பலியான அமெரிக்க ராணுவவீரர்களின் எண்ணிக்கை 4236 ஆகும். ஆப்கானிஸ்தான் போரில் 644 ராணுவ வீரர்கள் பலியானார்கள். பலியான அமெரிக்க ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஒபாமா கையெழுத்திட்ட கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

Read more...

பிரான்சில் நாளை கறுப்பு தினம் அனுஷ்டிக்கவுள்ளதாக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

இலங்கை சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது. 61 ஆவது சுதந்திர தினத்தில் ஈழத்தமிழர்கள் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர் என பிரான்சிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அன்றை தினத்தில் தமிழர்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் கறுப்பு தினமாகவும் கடையடைப்பு தினமாகவும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் விமானக் குண்டுவீச்சுக்களை உடன் நிறுத்தக்கோரியும், சர்வதேசமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் இப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read more...

நோர்வே நாடாளுமன்றம் முன்பாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் தீடீர் போராட்டம்

நோர்வே நாடாளுமன்றம் முன்பாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் தீடீர் போராட்டம் நாளாந்தம் வகைதொகையின்றி தமிழ் மக்களைக் கொன்று குவித்துவரும் சிறிலங்காவின் தமிழின அழிப்பை நிறுத்த, நோர்வே அரசாங்கம் செயலில் இறங்க வேண்டுமென்று கோரி நோர்வேயில் நேற்று கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை நோர்வே நாடாளுமன்றத்தின் முன் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் 1500 வரையான மக்கள் பங்கேற்றனர். வன்னி மீது பெருமெடுப்பிலான வல்வளைப்பு, இன அழிப்பு போரினை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறிலங்கா பேரினவாதம், கடந்த இரண்டு வார காலத்திற்குள் மட்டும் 800க்கும் அதிகமான மக்களை கொன்றழித்துள்ளதோடு, 3000க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுக்குட்பட்டுள்ளனர். வன்னி மக்கள் எதிர்நோக்கும் பாரிய மனிதப்பேரவலத்தை நிறுத்துவதற்கு, செயல்வலுவுள்ள அனைத்துலக தலையீடு அவசியமாகும். நோர்வே உட்பட்ட அனைத்துலக சமூகம் தாமதிக்கின்ற ஒவ்வொரு கணமும் அங்கு உயிர்கள் பலியெடுக்கப்படுவது அதிகரித்துக் கொண்டேயிருக்கும். அந்த வகையில் சமாதான முயற்சிகளுக்கு அனுசரணை வகித்த நோர்வே அரசாங்கம் அவ்வாறான அனைத்துலக அழுத்தத்தினை போரை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும். நான்கரை லட்சம் மக்கள் முற்றுகையிடப்பட்டுள்ள சிறிலங்கா அரசின் இன அழிப்பினை தடுத்து நிறுத்திட, உடனடிப் போர்நிறுத்தத்திற்குரிய அழுத்தத்தினை சிறிலங்கா அரசிற்கு கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

Read more...

About This Blog

About This Blog

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP