ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அடித்து உதைத்த கல்லூரி நிர்வாகம் ; மாணவர்கள் கொந்தளிப்பு
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நாமக்கல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது அவர்களை கல்லூரி நிர்வாகம் அடித்து உதைத்து கல்லூரிக்குள் இழுத்துச் சென்றதால் அனைத்து மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விடுமுறையில் இருந்த பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரிகள் 09.2.09 அன்று திறக்கப்பட்டன. இந்நிலையில் நாமக்கல் மல்லசமுத்திரத்தில் உள்ள மகேந்திர பொறியியல் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று (11.2.09) காலை ஒன்பது மணியளவில் "இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்த வலியுறுத்தியும், முன்கூட்டியே பொறியியல் கல்லூரியை திறந்ததை கண்டித்தும்" வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் செய்தனர்.
கைகளில் "மத்திய அரசே இலங்கைக்கு ஆயுத உதவி செய்யாதே, பாராண்ட இனம் இன்று பதுங்கு குழியில்" என்பது போன்ற உணர்வுமயமான தட்டிகள் ஏந்தி இருந்தனர். அம்மாணவர்கள் " எங்களுக்கு முன்கூட்டியே கல்லூரி திறந்து, மாணவர்களிடம் பிரித்தாளும் வேலையை அரசு செய்கிறது. இது எங்களுக்கு தமிழ் உணர்வு இல்லாதது போல் காட்டும் வேலையாகும். எங்களுக்கும் இனமான உணர்வு இருக்கு என்பதை காட்டவே இந்த போராட்டம் என்றவர்கள் "எங்கள் தொப்புள் கொடி உறவுகள் அங்கே கொத்து கொத்தாக சிங்கள அரசால் கொல்லபடுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் அதற்காக அடுத்த கட்டமாக அனைத்துக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து போராட உள்ளோம்" என்றனர்..
மாணவர்கள் போராட்டத்தில் இருக்கும் போதே கல்லூரி நிர்வாகம் மாணவர்களை மிரட்டியும், அதட்டியும் அடித்தும் கல்லூரிக்குள்ளே இழுத்துப் போயினர். இது நாமக்கல் முழுவதும் பரபரப்பாகி உள்ளது. மாணவர்களை அடித்து இழுத்துச் சென்றது காட்டு தீயாக அனனத்துக் கல்லூரிகளுக்கும் பரவி மாணவ சமுதாயத்திடம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.
0 மக்கள் கருத்துக்கள்:
Post a Comment