நோர்வே நாடாளுமன்றம் முன்பாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் தீடீர் போராட்டம்
நோர்வே நாடாளுமன்றம் முன்பாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் தீடீர் போராட்டம் நாளாந்தம் வகைதொகையின்றி தமிழ் மக்களைக் கொன்று குவித்துவரும் சிறிலங்காவின் தமிழின அழிப்பை நிறுத்த, நோர்வே அரசாங்கம் செயலில் இறங்க வேண்டுமென்று கோரி நோர்வேயில் நேற்று கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை நோர்வே நாடாளுமன்றத்தின் முன் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் 1500 வரையான மக்கள் பங்கேற்றனர். வன்னி மீது பெருமெடுப்பிலான வல்வளைப்பு, இன அழிப்பு போரினை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறிலங்கா பேரினவாதம், கடந்த இரண்டு வார காலத்திற்குள் மட்டும் 800க்கும் அதிகமான மக்களை கொன்றழித்துள்ளதோடு, 3000க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுக்குட்பட்டுள்ளனர். வன்னி மக்கள் எதிர்நோக்கும் பாரிய மனிதப்பேரவலத்தை நிறுத்துவதற்கு, செயல்வலுவுள்ள அனைத்துலக தலையீடு அவசியமாகும். நோர்வே உட்பட்ட அனைத்துலக சமூகம் தாமதிக்கின்ற ஒவ்வொரு கணமும் அங்கு உயிர்கள் பலியெடுக்கப்படுவது அதிகரித்துக் கொண்டேயிருக்கும். அந்த வகையில் சமாதான முயற்சிகளுக்கு அனுசரணை வகித்த நோர்வே அரசாங்கம் அவ்வாறான அனைத்துலக அழுத்தத்தினை போரை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும். நான்கரை லட்சம் மக்கள் முற்றுகையிடப்பட்டுள்ள சிறிலங்கா அரசின் இன அழிப்பினை தடுத்து நிறுத்திட, உடனடிப் போர்நிறுத்தத்திற்குரிய அழுத்தத்தினை சிறிலங்கா அரசிற்கு கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
0 மக்கள் கருத்துக்கள்:
Post a Comment